வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! நெடுங்கவிதைகள்: 2010

Monday, July 5, 2010

என் 'மனசு'க்கு வாங்க..!

நண்பர்களே...

இன்று முதல் எனது இடுகைகள் எல்லாம் மனசு வலைத்தளத்தில் மட்டுமே பதிவு செய்கிறேன். தயை கூர்ந்து நண்பர்கள் அனைவரும் என் மனசுக்குள் வந்து (சு)வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். என்னை பின் தொடரும் நண்பர்கள் அனைவரும் தயைகூர்ந்து சிரமம் பாராது என் மனசை பின் தொடரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மனசு எனக்கு மிகவும் பிடித்த பெயர். இதற்கான காரணம் எனது ஆரம்ப இடுகைகளில் இருக்கின்றது. இருந்தாலும் சொல்கிறேன். நான் கல்லூரியில் படிக்கும்போது நண்பர்களுடன் இணைந்து நடத்திய கையெழுத்துப் பிரதியின் பெயர் இது. எனக்கும் எழுதும் ஆவலையும் பத்திரிக்கை மீதான காதலையும் கொடுத்தது இந்தப் பெயர். எனவே கிறுக்கல்கள், நெடுங்கவிதைகள் மற்றும் சிறுகதைகள் எல்லாம் இனி என் மனதில் மட்டுமே.

இன்று எனது பந்தயம் என்ற சிறுகதையை பகிர்ந்துள்ளேன். படித்து ஓட்டும், பின்னூட்டமும் மறவாமல் பின் தொடரவும் உங்களை என் மனசுக்கு அழைக்கிறேன்.

உங்கள் நட்பு தொடரும் என்ற நம்பிக்கையில்......

என்றும் நேசங்களுடன்,

சே.குமார்.




Tuesday, June 29, 2010

வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்!

என்ன எல்லாரும் நல்லாயிருக்கீங்களா...? பார்த்து பல நாளாச்சு..? எப்படியிருக்கீங்க..? ஊருக்குப் பொயிட்டு வந்து ரெண்டு நாள் ஆயாச்சு... வேலைக்குப் போனாலும் வேலை ஓடலைங்க... மனைவி, குழந்தைகளின் கஷ்டம் போனிலும்... மனக்கண்ணிலும்...

பிளாக்கில் எழுதவோ, உங்கள் எழுத்துக்களை படிக்கவோ நினைக்கும் மனநிலை எனக்குள் இன்னும் வரவில்லை. இருந்தும் ஒரு சிலரின் எழுத்துக்களை படித்து பின்னூட்டமிட்டேன். பலரை படிக்கவில்லை.

மன ஓட்டத்தை காரைக்குடியில் இருந்து அபுதாபிக்கு மாற்ற சில நாட்கள் ஆகலாம். நான் வரும்போது என்னிடம் அழுத மனைவியையும் என் கழுத்தைக் கட்டிக் கொண்டு கதறிய என் மகளும்... இன்று மாலை கூட அப்பா... வா...ப்பா என்று மழலையாய் போனில் அழைக்கும் என் ஒன்றரை வயது மகனின் குரலும் எனக்குள் தனிமையில் அழுகையை வெளிப்படுத்தினாலும் உங்கள் ஆக்கங்கள் என் மனபாரத்தை குறைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இருந்தாலும் என்னையே நினைத்து இருக்கும் மூன்று ஜீவன் களுக்கும் என் பேச்சு மட்டுமே ஆறுதல்...

அவர்களின் பாரம் கரையும் நேரத்தில் எனக்கு ஓராண்டு முடிந்து மீண்டும் விடுமுறை கிடைக்கும்.

ஓகே நண்பர்களே... நண்பர் நாடோடி இலக்கியன் தொடர்பதிவுக்கு அழத்திருக்கிறார். விரைவில் எழுதுகிறேன் நண்பரே... அப்புறம் இன்னொன்னு இப்ப எங்க புராஜெக்ட் அரசு அலுவலகத்தில்.

எனவே நான் சில நாட்களுக்கு அபுதாபியில் இருந்து 50கிமீ பயணித்து வேலை செய்ய வேண்டிய கட்டாயம். மாலை ஆறுமணிக்கு வரும்போது சோர்வும் கூட வருகிறது.

நான்கு வலையையும் ஒன்றாய் கொண்டு வரலாம் என்று நினைக்கிறேன். உங்கள் எண்ணத்தை எனக்கு பின்னூட்டமிடவும். தொடரும் நாட்களில் தொடரும் என் எழுத்து... நன்றிகள் பல...

நட்புடன்
சே.குமார்.




Wednesday, May 19, 2010

ஊருக்குப் போறேன்..!

அன்பான நட்புககு

நாளை மாலை நாற்பது நாள் விடுமுறையில் ஊருக்குப் போகிறேன்... அதற்காக கடந்த ஒரு வாரத்தில் அலுவலக பணிகள் அதிகம் செய்து வைக்க வேண்டிய நிலை. அதனால்தான் நண்பர்களுக்கு பின்னூட்டம் இடவோ, எனது பிளாக்கில் பதிவிடவோ முடியாத சூழல். இனி நாற்பது நாட்களும் என்னால் வலைக்குள் வரமுடியுமா என்பது தெரியவில்லை. நான் விடுமுறைக்கு விண்ணப்பித்து, கிடைத்த நாள் முதல் என் வரவை நாட்காட்டியில் மே-20 என்ற இடத்தை அம்மாவிடம் காட்டஸ் சொல்லி கலர் பென்சிலால் வட்டங்கள் இட்டு காத்திருக்கும் என் தங்கம் (ஸ்ருதி). ஒரு வருடமே ஆனாலும் என் முகம் ஞாபகத்தில் இல்லாவிட்டாலும் மழலையாய் அலைபேசியில் 'அ..ஆப்பா' என்றழைத்து முத்தமிடும் என் செல்லம் (விஷால்) , மற்றும் எனக்காக வாழும் என் அன்பு மனைவி இவர்களுடன் நாட்களை சந்தோசமாய் நிறைக்க இருப்பதால் வலைக்குள் வருவேன்... அடிக்கடி என்பது இயலாத காரியம். அப்பொழுது கண்டிப்பாக பின்னூட்டம் இடுவேன்.



அதுவரை பின்னூட்டம் இடுகிறேன் என்று படுத்தவோ.... பதிவிடுகிறேன் என்று உங்களை வதைக்கவோ செய்ய மாட்டேன் என்பதால் உங்கள் சந்தோஷத்தை சந்தோஷமாக அனுபவியுங்கள்.



என்னைத் தொடர்பு கொள்ள நினைக்கும் நண்பர்கள் 919659976250 என்ற எண்ணில் வெள்ளிக்கிழமை முதல் தொடர்பு கொள்ளலாம். காரைக்குடியிலும் தேவகோட்டையிலும் தான் அதிக நாட்கள் இருப்பேன் என்று நினைக்கிறேன்.



பாசங்களுடன்,

சே.குமார்.




Wednesday, May 12, 2010

இனிக்காத காதல்




உப்புச் சப்பில்லாத
விஷயங்களுக்கெல்லாம்
உன்னிடம் கோபம்..?

எட்ட இருந்து ரசிக்க
எத்தனித்த இதயத்தை
கிட்ட இருந்து இம்சிக்கும்
இதயமில்லா மனிதன் நீ..!

வசதிகளைக் குறைத்து
உன்னுள் வாழக் கற்றுக்
கொண்ட எனக்கு
வாழ்க்கையில் துயரத்தை
மட்டுமே தூண்டில்
புழுவாய் தந்தவன் நீ..!

எனக்காக என்றில்லாமல்
உனக்காக மட்டுமே நானாக
இருந்த போதும்
என் நட்பு வட்டத்தையும்
நஞ்சாய் பார்ப்பவன் நீ..!

உன் சுற்றமும்
என் சுற்றாமும்
வேறல்ல என்ற எனக்குள்
சுற்றத்தை மறக்கச்
சொன்ன பாவி நீ..!

காதலை காதலிக்கத்
தெரியாத உன்னை
காதலித்த காதல் நான்..!

எனக்குள் இப்பொழுதெல்லாம்
காதலித்த தருணங்களின்
கடைசி நொடி வரை
மட்டுமே நீ நீயாக..!

காதலித்தபடியே
கடந்திருந்தலோ...
மரணித்திருந்தாலோ...
காதல் இனித்திருக்குமோ..?

-'பரிவை' சே.குமார்




Tuesday, May 4, 2010

பாழாப்போன மனசு..!



எத்தனை முறை
தடுத்துப் பார்த்தாலும்
பாழாப்போன மனசு
பழசை மட்டுமே நினைக்கிறது...

உன்னில் நான் உறைந்த
காலத்தில் நீ...

உடைத்துக் கொடுத்த குச்சி...
உடைக்காமல் கொடுத்த பேனா...

உயிருடன் பிடித்துக்
கொடுத்த பொன்வண்டு...

கோவில் வாசலில் காத்திருந்து
கொடுத்த குங்குமம்...

எனக்காய் பறித்து வந்த மல்லிகை...
திருவிழாவில் வாங்கி வந்த ரிப்பன்...

நான் துயரப்பட்ட போதெல்லாம்
துக்கம் தாங்கிய உன் மடி...

இன்னும் எத்தனையோ...
அத்தனையும் மறக்க நினைத்தேன்
என் திருமணத்தில்...

என்ன செய்ய...?
காலங்கள் கரைந்தாலும்
பாழாய்ப்போன மனசு
மட்டும் பழசை சுமந்து...

-'பரிவை' குமார்.




Tuesday, April 20, 2010

அப்பத்தா



வரிஞ்சு கட்டிய சேலையும்
காதில் ஆடும் தண்டட்டியும்
வாயில் ஊறும் போயிலையும்
நெத்தி நிறைஞ்ச குங்குமமுமாய்...

வாக்கா வரப்பு சண்டையில
இப்பவும் முதலிடம்தான்...

சண்டைக்குன்னு போனா
சரமாரி 'அந்த' சொல்லுதான்...

அதுக்குப் பயந்தே
அப்பத்தாகிட்ட வாய் கொடுக்க
பயப்படும் ஊருசனம்...

களவாணிப்பய... கிறுக்குப்பய...
ரெக்க மண்டை... விசுக்கான்...
அப்பத்தாவின் அடைமொழிகள்...

பேரனை மட்டும் செல்லமாய்
தீவட்டித்தடியன்...

ஐயா முடியாம விழுந்தப்ப
போயி சேராம
வதையை வாங்குது....
என்று பேசினாலும்...

இப்பல்லாம் அப்பத்தா
யாரோடும் சண்டையிடுவதில்லை...
பட்டப்பெயர் பயன்படுத்துவதில்லை...
முகத்தில் கவலை ரேகைகள்...

தன்னை தவிக்கவிட்டுட்டு
மகாராஜன் போயிடுவாரென்றா..?
இப்படியே அவரவிட்டுட்டு
நாம போயிடுவோமென்றா...?

யாராலும் அறியமுடியவில்லை
அப்பத்தாவின் மனசை..!

-'பரிவை' சே.குமார்





Tuesday, April 13, 2010

சித்திரை...



தமிழ் வருடத் தலைமகளே...
தமிழர்களின் பொன்மகளே...
அரசாணையால் உனக்கு
சிறையிட்ட போதினிலும்...
அத்'தை' மகளை
அரியாசனத்தில் அமர
வைத்த போதினிலும்...
தத்'தை' மகளாம் நீ
என்றும் எங்கள்
முதல் மகளே...!

என் நட்புக்கும் பாசமலர்களுக்கும் தமிழ் புத்தாண்டு / சித்திரை முதல் நாள்
வாழ்த்துக்கள்.

-'பரியன் வயல்' சே.குமார்.




Sunday, April 11, 2010

உயிர் 'கொல்லி'


சல்லாபிக்க நினைத்த
மனசு உல்லாசம் தேடியது..!

வாழ்க்கை வசந்தத்தில்
வாலிபத்தின் விருந்து..!

வாடகை உடம்போடு
கரைந்தது இரவு..!

எச்சத்தின் உச்சம்
தொடர்ந்த இரவோடு
தொலைந்தது நிம்மதி..!

கேட்டுப் பெற்றவள்
கேட்காமல்
கொடுத்துச் சென்றாள்.

-'பரியன் வயல்' சே.குமார்.




Friday, April 9, 2010

வாங்கி வந்த வரம்..!

ஏலே ராசு
எங்கடா போனே முண்டம்?
மாட்டை அவுக்காம...

இந்தா வாரேன் ....
குத்திய பம்பரம்
பாக்கெட்டுக்குள் நுழைய
எதேச்சையாய் இழுக்கப்பட்டது
பள்ளியில் கொடுத்த காக்கி டவுசர்..!

ஓடிய வேகத்தில்
கசாலைக்குள் நுழைய முடியாமல்
தடுத்தது மூச்சுக்குரல்..!

கட்டிய மாடுகளுக்கு
அந்தப் பக்கம்...
அப்பாகூட யாரோ....

மாட்டை அவிழ்க்க சென்றால்
அப்பா அடிப்பார்...
அவிழ்க்காமல் சென்றால்
அம்மா அடிப்பாள்...

யாரோ ஒருத்திக்கு முன்னால்
அடிவாங்குவதை விட
அடுக்களையில் வாங்கலாம்..!

என்னடா மாடவிழ்க்காம...?
கேள்வி முடியும் முன்...
அப்பா அங்கே.... பதிலாய்...

அவரு எதோ தப்பு பண்றாரு..?
நீ கேக்க மாட்டியா...?
கண்களில் கோபம் கண்ணீராய்...

அணைத்துக் கொண்டு
அவளும் அழுதாள்...
நான் வாங்கி வந்த வரமென்று...!


-'பரியன் வயல்' சே.குமார்




Monday, April 5, 2010

ரசிகனாய்..!



உன் ஒவ்வொரு அசைவையும்
அணுஅணுவாய் ரசிக்கும் ரசிகனாய்..!

நீ கோலமிடும்போது
நெற்றியில் விழும் கற்றை
முடியை மணிக்கட்டால்
தள்ளிவிடும் பாங்கு..!

குளித்து நீ திரும்புகையில்
உன் கழுத்தில் ஜொலிக்கும்
நீர்த்திவளைகள்..!

உன் கால்களின் நர்த்தனத்தில்
நளினமாய் இசைக்கும் கொலுசொலி..!

தோழிகளின் பவனியில்
குதூகல சிரிப்புக்கு இடையே
தனித்து ஒலிக்கும் சிரிப்பு..!

தலையில் ஆடும்போது
தரையில் விழுமோ என
பயத்தை விதைக்கும் ரோஜா..!

அடிக்கடி அலைந்து
அங்கும் இங்கும் ஓடி
என்மேல் நிலைக்கும்
உன் கண்கள்..!

அனைத்தையும் ரசிக்கும்
ரசிகனாய் நான்..!


-'பரியன் வயல்' சே.குமார்.




Wednesday, March 31, 2010

எங்க போறே...?



என்ன தாத்தா கோவமாப் போறே..?
ஒண்ணுமில்லடி ராசாத்தி...

இப்படித்தான் பாட்டி போனப்போ
நீ ஒண்ணுமில்லன்னு சொன்னே
பாட்டி இன்னும் வரலை...

நீயும் ஒண்ணுமில்லன்னு சொல்றே...
அப்ப நீயும்.... வாயைப் பொத்தி
மடியில் அமர்த்தி...

பாட்டி போனாங்கள்ல
அவங்களைத்தான்
பார்க்கப் போறேன்...

நானும் வாரேன்...

ரொம்பத்தூரம் போகணும்
தாத்தா பாத்துட்டு வந்துடுறேன்...

சீக்கிரமா பார்த்துட்டு வா...
எங்கிட்ட கூட்டிக்கிட்டு வா...

ராத்திரியாச்சின்னா வராதே...
பேயெல்லாம் வருமாம்...

சரிடி என் செல்லம்...
துண்டை தோளில் போட்டுக்
கொண்டு மனைவியை புதைத்த
இடம் நோக்கி நடந்தார்...

சில வார்த்தைகள் பேசி
மனபாரத்தை குறைக்க..!

-'பரியன் வயல்' சே.குமார்

படத்துக்கு நன்றி : வண்ணத்துப்பூச்சி சினிமா குழுவிற்கு






Sunday, March 28, 2010

கலை...!



வீட்டிற்குள் நுழையும் போது
வாசலில் கீச் கீச் சப்தம்...
அண்ணாந்து பார்த்தால்
நிலைப்படிக்கு அருகில்
சிட்டுக்குருவிக் கூடு..!
ஏனோ கலைக்க மனமில்லை..!

கர்ப்பமுன்னு டாக்டர்
சொல்லிட்டாங்க மனைவி
சொன்னதும் யோசிக்காமல்
கலைத்துவிடு என்றது மனசு..!

-'பரியன் வயல்' சே.குமார்.




Wednesday, March 24, 2010

வாழ்க்கையாய் நீ..!

ஏதோ எழுத நினைத்து
பேப்பரில் பேனா
முத்தமிட்டதில்
பிரசவித்தது
உன் பெயர்தானடி..!

நித்தமும் நினைவுகளில்
நீந்தும் நீ கனவிலும்
என் கண்களில்..!

சாக்லேட் கிடைத்தால்
சந்தோஷப்படும்
குழந்தையைப் போல்
உன் தரிசனத்தில்..!

இரயில் பயணத்தில்
அருகருகே இருந்தும்
இணைகோடுகளாய்..!

கோயிலில் நீ
ஏற்றிய நெய்தீபம்
யாருக்காக என்பதை
தீபம் அறியும்..!

உன் வேண்டுதல்
உனக்கானதில்லை
என்பதை அந்த
தில்லை நாயகன்
அறிவானோ..?

நீ மூன்றாம் பிறையாய்
உயிருக்குள்...
பௌர்ணமியும்
அமாவாசையும்
உயிர்ப்பதில்லை..!

சீதை...
அகலிகை...
கண்ணகி...
தமயந்தி...
பாஞ்சாலி...
எல்லாம் வரலாறாய்..!
நீ வாழ்க்கையாய்..!

-'பரியன் வயல்' சே.குமார்.




Saturday, March 20, 2010

டைரியும்... மனைவியும்...

எனக்காக எழுதிய டைரிக்குறிப்புகள்
இன்று உன் நாவில் முள்ளாய்..!

படிக்கும் காலத்தில் வந்த காதல்
பந்தாடப்படுகிறது உன் நாவில்..!

எல்லாம் உன்னிடம் சொன்ன நான்
எதைச் சொல்ல மறந்தேன்..?

காதல் என்பது கருக்கொலையல்லவே...
வாலிபத்தில் வரும் வசந்தம்தானே..!

எனக்கும் அவளுக்குமான நட்பில்
ஊடலும் கூடலும் பருவத்தின் நாடகமே..!

காதலித்ததற்கு எப்படி காரணம் இல்லையோ
அதுபோல பிரிவிற்கும் காரணம் இல்லை..!

எனது டைரியில் இருக்கும் எல்லாம்
எனக்குள் ரகசியமானவை மட்டுமே..!

அவற்றைப் படித்துவிட்டு
என் இதயத்தைக் கிழிப்பது ஏனோ..?

ஒவ்வொரு இரவிலும் தொடரும் பகலிலும்
வார்த்தைகளால் கொல்கிறாயே ஏனடி..!

என்னைக் கொல்லாமல் இருக்க எழுதிய டைரி
கொல்லாமல் கொல்கிறது உன் பேனாமுனை பேச்சில்..!

நான் மறந்த காதலை நீ மீண்டும்
என்னுள் மலரச் செய்ய்த் துடிக்கிறாய்..!

வேண்டாம் பெண்ணே..!
தொலைந்த பொழுதுகளைக் கொண்டு
வரும் பொழுதுகளை தொலைக்க நினைக்காதே..!


-'பரியன் வயல்' சே.குமார்




Wednesday, March 17, 2010

தொலையாத ஞாபகம்..!


பிறந்த மண்ணில் கால் பதித்தபோது
ஞாபகத்தில் ஞாபகமாய்...

ஒற்றைப்பனையும்... குட்டைப்பனையும்...
கோணப்பனையும்... சதைக்காச்சியும்...

இனிப்புப்புளியும்... கரும்புளியும்...
வத்தக்காச்சியும்... சுடுகாட்டுப்புளியும்...

கெழுத்திமீனும்... கெண்டைமீனும்...
விரால்மீனும்... அயிரைமீனும்...

பரந்த கண்மாயும்... விளைந்த வயல்வெளியும்...
நீரோடும் வாய்க்காலும்... முண்டாசு மனிதர்களும்...

ஓட்டு வீடும்... ஒத்த வீடும்...
வயலார் வீடும்... அம்பலார் வீடும்...

ராசுமாமாவும்... மீசைமாமாவும்...
கட்டையனும்... குட்டையனும்...

காளி ஆயாவும்... கண்ணம்மா பாட்டியும்...
அழகம்மா அக்காவும்... ராஜாத்தியும்...

கருத்தப் பசுவும்... வெள்ளச்சி எருமையும்...
செம்மறி ஆடும்... பாசமுள்ள ராஜா நாயும்...

மாரியம்மன் கோயிலும்... கருப்பண்ணசாமி வீடும்...
கம்மாக்கரை முனியும்... மரத்து நாகரும்...

காதலை விதைத்த வன்னி மரமும்
விதையை வீசிய வேள்விழியாளும்...

வாழ்க்கையை கற்றுக் கொடுத்த காதலும்...
வாழக் கற்றுக் கொடுத்த மனிதர்களும்...

தொலைந்த எல்லாம் ஞாபகமாய்...
தொலையாமல் என் சிறிய இதயத்துக்குள்...

-'பரியன் வயல்' சே.குமார்.




Thursday, March 11, 2010

முகம் காட்டுவாயா அம்மா..!

இது 50வது படைப்பு. தொடர்ந்து எனது பதிவுகளுக்கு பின்னூட்டம் மூலமாகவும் தமிழிஷ், உலவு மற்றும் தமிழ்மணத்தின் மூலமாக வாக்கு அளித்தும் வாழ்த்துக்களை வழங்கும் தோழர், தோழியர்க்கும் நன்றி



அம்மா..
கனவுகளைச் சுமக்கும் எனக்குள்
உன் நினைவுகளைச் சுமக்க வைக்கிறாயே..!

பாட்டில் பாலும் கார்டூன் படமும்
கசப்பாய் இருக்கின்றன..!

ஒவ்வொரு இரவும் உனக்காய்
விழித்திருப்பேன் இமை மூடுவதறியாமல்..!

நீ எனக்கு நிலா காட்ட வேண்டாம்...
நிலா காட்டி சோறுட்ட ஆயா இருக்கிறாள்..!

நித்தம் கதை சொல்ல வேண்டாம்...
பழங்கதை சொல்ல தாத்தா இருக்கிறார்..!

கட்டியணைத்து முத்தமிட வேண்டாம்...
கடிந்து பேசினாலும் அவ்வப்போது
முத்தமிட அப்பா இருக்கிறார்..!

மாதர் சங்கமும் பொது நலமும் உனக்குப் பெருமை...
உன் முகம் கண்டால் எனக்கு இனிமை..

ஒரு முறை உன் முகம் காட்டி செல்வாயா..?
நினைவுகளின் சுமையை இறக்கி
உன் மலர் முகம் சுமந்து செல்கிறேன்..!

-'பரியன் வயல்' சே.குமார்.




Sunday, February 28, 2010

பிரிவு தாகம்

மார்கழிக் காலை...
மயக்கும் மாலை...
சுட்டெரிக்கும் பகல்...
சுகமான இரவு...
எல்லா நேரத்திலும்
என் அருகே நீ..!

எட்டிப் பிடிப்பது
கட்டிப் பிடிப்பதுமாய்...
இழுத்து அணைப்பதும்
இறுக அணைப்பதுமாய்...

எத்தனை முறை உன்
அணைப்புக்குள் சிக்கிக்
கொண்டாலும் மீண்டும்
கேட்கும் உன் கதகதப்பு..!

சிணுங்கலாய் கோபித்தாலும்
சில நேரமே விலகியிருப்பாய்...
தனித்திருக்க நினைத்தாலும்
தழுவலை நாடும் என் இதயம்...
நிஜமான கோபம் கூட
உன் முகம் பார்த்தால் நிழலாகும்...

இன்று நம் காதல்
செல்பேசி வழி சிணுங்கலும்
கணிப்பொறி வழி
முகம் பார்த்தலுமாய்...

எனக்கு
உன் வரவு 
குறிஞ்சிப் பூவாய்...
என் வாழ்க்கை
விட்டில் பூச்சியாய்...
-'பரியன் வயல்' சே.குமார்




Tuesday, February 23, 2010

ஜாதீய தாகம்


ஜாதிக்கொரு சங்கம்...
வீதிக்கொரு பலகை...

கோயில் பிரச்சினை
கும்பிடும் ஐயனாருக்கு
ஜாதிக்கொரு பூட்டு..!

பூட்டுச் சிறைக்குள் சிலைகள்
வேதமந்திரம் வீதியில்..!

திருவிழா நடத்த
தீர்மானித்த கூட்டத்தில்
முன்னோடியாய் ஜாதி..!

அருவாளும் கத்தியும்...
கம்பும் கற்களும்...
அவசர வேலையில்...

உயிருக்குப் பயந்து
சிதறிய மனிதர்களின்
செருப்புகள் சிதறியிருந்தன
ஜாதி அறியாமல்..!

சிதறிய ரத்தம் எல்லாம்
சிவப்பாய்...
ஜாதியின் பெயரோ...
வீதியின் பெயரோ...
அறியாமல் கலந்து..!

அடிபட்டாலும் மனசுக்குள்
எரிந்து கொண்டுதான்
இருந்தது ஜாதீய தீ..!

என்று தணியும் இந்த
ஜாதீய தாகம்..?

-'பரியன் வயல்' சே.குமார்.




Saturday, February 20, 2010

அங்கும்... இங்கும்...

அங்கு:

வசீகரிக்கும் கண்கள்...
நீளமான மூக்கு...
புன்னகைக்கும் உதடுகள்...
அழகான மீசை...
அளவான தாடி...
பரந்த தோள்...
விரிந்த மார்பு...
மேவிய வயிறு...
கடைந்தது போல் கால்கள்...
எல்லாம் கனவாய்...
அருகில் குறட்டைவிட்டு
தூங்கும் ஒல்லிக் கணவன்..!

இங்கு:

மயிலிறகாய் நீண்ட கூந்தல்...
அழகிய நெற்றி...
கவரும் கருவிழி...
கூர்மையான நாசி...
ஆப்பிள் வதனம்...
வசீகரிக்கும் அதரம்...
சங்குக் கழுத்து...
உடுக்கை இடை...
எல்லாம் கனவாய்...
அருகில் குண்டு மனைவி..!

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்..?




Tuesday, February 16, 2010

புன்னகை பூ..!



உன் வரவுக்காக
நினைவுகளின் துணையோடு
மதில் மேல் பூனையாய் நான்..!

வருவோர் போவோரின்
பார்வைகள் துளைத்தாலும்
தொலைக்காத நினைவுகளுடன்..!

நண்பர்கள் கச்சேரி
நடக்கும் அரசமரத்தடியில்
என் வரவிற்காக நட்பின் வட்டம்..!

குட்டிச்சுவற்றின் மீது
உன் வரவுக்காக
தவிக்கும் இதயத்துடன்
நட்பு மறந்து நான்..!

எதேச்சையாய் பார்த்த
அப்பாவின் நண்பர்
என்னப்பா குட்டிச்சுவரில் வாசம்
என்கிறார் கிண்டலாக..!

என் சுவாசத்திற்காக என்று
சொல்ல எத்தனித்த நாவை
கடித்துக் கொள்கிறேன்..!

அவர் பார்வையில் தெரிந்தது
என் அப்பாவிடம் வத்திவைக்க
இருக்கும் அவரின் நெஞ்சம்..!

எதையும் நினைக்காமல்
உன் நினைவாய் உன் வரவுக்காக..!

இதயமும் நொடியும்
மாறி மாறி துடிக்க...
வழி மேல் விழி வைத்து...

தோழியருடன் நிலவாய் நீ...
எதேச்சையாய் பார்ப்பதுபோல்
பார்த்தாய்... பின் பூத்தாய்...
மலருமுன் மறைந்து விட்டாய்..!

புன்னகையால் பூத்த இதயத்துக்குள்
உன் நினைவோடு நண்பர்களை
நோக்கி பயணிக்கும் என்னைவிட
மின்னலாய் மனது...

 உன் புன்னகையை
அவர்களிடம் பூக்கவிட..!

-சே.குமார்




Wednesday, February 10, 2010

கொதிக்கும் மீன் ஆசை


பக்கத்து வீட்டிலிருந்து வரும்
வாசத்தால் நாவில் உமிழ்நீர்...

ம்... குளத்து மீன் நல்லாயிருக்கும்
நமக்கெங்கே அது கிடைக்கிறது...

அவனவன் ஊர் கட்டுப்பாட்டை
மீறி களவாண்டு திங்கிறான்...

நாம வாசத்தை மோந்து
பார்த்து நோவ வேண்டியதுதான்...

மனைவியின் புலம்பலால்
நாளை நம்ம வீட்டிலும்
குளத்து மீன் கொதிக்கும்...

பாச்சை வலையை
யாரும் அறியா இரவில்
கட்டிவிட்டு வீடு வந்தான்...

நாளை குளத்துமீன் குழம்புக்கு
அம்மியில் மசாலா அரைத்து
சேர்த்து வைத்துவிட்டு
மகிழ்வுடன் படுக்கும் போது

'நேரத்துல கிளப்பிவிடு
ஆளுக எழும்புறதுக்குள்ள
வலை எடுக்கணும்...'

பாவம்..
இரவில் திடீர் மழை
பெய்யும் என்பதும்...

அதில் பாச்சை வலை
பாழாப்போகும் என்பதும்..

அறியாமல் மீன் ஆசையோடு
ஆழ்ந்த உறக்கத்தில்..

-சே.குமார்









Saturday, February 6, 2010

மேய்ப்பன்..!


வெயில் தாங்காத எருமை...
மழை தாங்காத பசு...
இரண்டுக்கும் நான்
மேய்ப்பனாக..!

காட்டுக்கு ஒன்று
வீட்டுக்கு ஒன்று
கயிரை இழுத்ததால்
காலை வாரியது..!

அம்மா வருமுன்
ஆவலாய் வீட்டுக்குள்...
தாயைக் கண்ட கன்று
பசியோடு புசித்தது
தாயின் மடியில்..!

எருமையோடு போராடி
எதிர்க்க முயன்றும்
முடியாமல் உருவிவிட்டேன்
ஒடிச் சென்றது நீருக்குள்..!

கரையிலிருந்த நான்
சற்றே கண்ணயர்ந்தேன்...
அவசர கதியில்
எங்கோ சென்றது எருமை..!

தேடிக் கலைத்து
வெறுங்கையுடன்
வீடு வந்தபோது...

'எருமை மாடே'
பசுவை விட்டுட்டு என்ன
புடுங்கினாய்...
பாலெல்லாம் போச்சு..!

எருமை மாடு
எருமையை தொலைந்தது
தெரியாமல்...
பால் போன வேதனையில்
வெடித்தாள் அம்மா..!

-சே.குமார்




Thursday, February 4, 2010

அப்பா... மகன்...

(ஆகஸ்ட்-2009ல் ஆர்வத்தோடு கிறுக்க ஆரம்பித்து இன்று வரை எனது வலைத்தளங்களான கிறுக்கல்கள், நெடுங்கவிதைகள், சிறுகதைகள் மற்றும் மனசு ஆகிய நான்கு வலைப்பூக்களிலுமாக இது 150வது படைப்பு.)


கடந்து சென்ற காலங்களில்
காட்டுத்தீயாய் எனக்குள் நீ..!

உன் முதுகில் நான் செய்த சவாரி
என் மகனுக்கு கிட்டவில்லை...
இயந்திரமான உலகில்
இயந்திரச் சைக்கிளில் அவன்..!

உன் கைபிடித்து நான்
நடந்த தருணங்கள்
உனக்களித்த சந்தோஷம்
எனக்கு கிட்டவில்லை...
பள்ளிப் பேருந்தில் அவன்..!

எனக்கும் உனக்கும்
ஆறுதலளித்த நம் அருகாமை
எங்களுக்குக் கிட்டவில்லை
ஹாஸ்டலில் அவன்..!

எல்லோரிடமும் சகஜமாய்
பேசும் அவன்
என்னிடம் செல்பேசியில்
பேசினாலும் அளவோடு..!

உனக்கும் எனக்குமான நட்பில்
அன்பிற்கு எல்லை இல்லை...
அவனுக்கும் எனக்குமான நட்பில்
புன்னகைக்கும் எல்லை உண்டு..!

நீயும் நானும்
பாசத்தின் அடிமைகள்...
அவனும் நானும்...?

-சே.குமார்




Sunday, January 31, 2010

இதுதான் உலகம்


நேற்றுவரை மனிதராய்
இன்று பிணமாய்..!

கதறி அழும் ரத்த உறவு..!
சோகத்துடன் மற்ற உறவு..!

வந்து போகும் பழக்கங்கள்..!
வராமல் இருக்கும் எதிர்ப்புகள்..!

கொடுத்த கடன் எவ்வளவு..?
வாங்கிய கடன் எவ்வளவு..?
வகையறியாமல் வாரிசுகள்..!

பயணிக்க தயாராய் பல்லாக்கு..!
பயண இறுதியில் படுக்கைக் குழி..!
எல்லாம் முடிந்து பட்டுவாடா...

நேற்றுவரை கேட்காமல் உதவிய
மனிதம் மண்ணுக்குள்..!

பத்து ரூபாய் பணத்துக்காக
சண்டையிடுகிறார்கள்
கேட்காமல் பெற்றவர்கள்..!

-சே.குமார்




Thursday, January 28, 2010

எல்லாம் நானாக...


உன் விழிமீன்கள்
நீந்தும் தடாகத்தில்
விழுந்த என்னை
விரட்டி விரட்டிப்
பார்க்கிறாய்..!
உன் விழியில்
என் உருவம்
மறையும் வரை..!

உன் நாசித் துவாரத்தின்
நளினத்தில் என்
உயிரின் வாசனையை
உறிஞ்சிப் பார்க்கிறாய்..!
என் உயிரின் வாசம்
உன் அருகாமையில்
உலரும் வரை..!

உன் உதடுகளின்
உச்சரிப்பில் நீ
தேடும் என் பெயரின்
அலைவரிசை...
என் நினைவு
மறையும் வரை..!

உன் உயிர்த்துடிப்பின்
லப்டப்பில் மெல்லிசையாய்
என் நினைவின் நாதம்...
உயிர்த் துடிப்பின்
உயிர் தொடரும் வரை..!

எல்லாம் நானாக...
நான் வெறுமையாய்..!

-சே.குமார்.




Monday, January 25, 2010

வேம்பு..!



உழைத்த களைப்பில்
கட்டிலில் உருண்டு
படுத்த போது
தலைக்கு மேல்
தாலாட்டியது
வேம்பு..!

எத்தனை பாரம்
எனக்குள் இருந்தாலும்
வாசலில் வரும்போது
வசந்தத்தை ஊட்டி
வலியைக் குறைத்தது
வேம்பு..!

குடிசையின்
வாசலில் பகலவனை
நெருங்க விடாமல்
பார்த்துக் கொண்டது
வேம்பு..!

குடிசை வீடு ஓடானது...
ஓட்டு வீடு காரை வீடானது...
வீட்டுக்குள் படுத்து
விட்டம் பார்த்த்போது
உத்திரமாய் சிரித்தது
வேம்பு...!

-சே.குமார்




Thursday, January 21, 2010

பார்வையோ பலவிதம்



என்னையும் உன்னையும்
இணைத்துப் பேசியது ஊர்..!

உன் காதலி நானென்று
உறக்கச் சொன்னது நட்பு..!

எதேச்சையாய் நீ பார்த்தாலும்
என்னைப் பார்ப்பதாய் கட்டுக்கதை..!

என் பாதம் உன் பாதை
தொடர்ந்தால் பார்வையின்
பார்வையோ பலவிதம்..!

என் சிரிப்புக்கு நீ திரும்பினால்
நமக்குள் சிக்னலாம்...
சிலரின் சிக்கலில்லா வார்த்தைகள்..!

எல்லாமே அவர்கள் முடிவில்
நமக்குள் இதுவரை இல்லை
அப்படி ஒரு எண்ணம்..!

நீயும் நானும் இன்னும் நட்பாய்...
தொடரும் நட்பில் தொலையட்டும்
அவர்களின் கனவு..!

-சே.குமார்




Tuesday, January 19, 2010

அனுபவிக்க ஆசை



வாகன இரைச்சலின்றி
அமைதியாய் விடியும்
அழகிய காலை..!

விடியலுக்கு முன்னே
விண்ணைத் தட்டும்
சேவல்களின் கூவல்கள்..!

பால் குடிக்க கன்றை
அழைக்கும் பசுக்கள்..!
கோலமிடும் குமரிகள்..!

வயல்களுக்கு இடையே
விழித்து வரும் சூரியன்..!

பக்கத்து வீட்டிலிருந்து
கேட்கும் சுப்ரபாதம்..!

இரைதேடி இலக்கு
நோக்கிச் செல்லும் பறவைகள்..!

வயலுக்குச் செல்லும் ஆண்கள்..!
எருக்கூடையுடன் பெண்கள்..!

நீர் நிறைந்த கண்மாய்..!
நீர் பாய்ந்தோடும் வாய்க்கால்கள்..!
காற்றுக்கு தலையசைக்கும் பயிர்கள்..!

எல்லாம் அனுபவிக்க ஆசை..!
என்ன செய்ய...

இயந்திரமாகிவிட்ட உலகில்
சிக்கிவிட்டதே என் கிராமம்..!

-சே.குமார்




Friday, January 15, 2010

மறுபிறப்பு



வலியோடு ஒரு இரவுப்பயணம்
அருகில் நீ அவஸ்தையாய்..!
இடிந்துபோன என் மனம் போல
வழியெங்கும் இருட்டின் வாசம்..!

எதிர்வரும் வாகனங்களின்
வெளிச்ச அருவியில்
கலங்கிய நம் கண்கள்
வெள்ளி மீன்களாய்..!

தொடரும் அவசரப் பயணத்தில்
இடை இடையே வேதனையில்
வெடிக்கும் உன் அழுகுரல்..!

காற்றைக் கிழித்துக் கொண்டு
பறக்கும் காருக்குத் தெரியவில்லை
அதற்கு முன் என் மனம்
போய்க் கொண்டிருப்பது..!

உன் விசும்பலின்
நீரோடை என் கண்ணில்...
உன் வேதனையின்
விலாசம் என் இதயத்துள்..!

துடிக்கும் உன்னுடம்
துணையாய் நான்...
இலக்கை எட்டிவிட்ட
நிம்மதி நமக்குள்..!

உன் வீறிடல்களுக்கு இடையே
புதிய உயிரின் அழுகுரல்...

மறுபிறப்பு உனக்கு மட்டுமல்ல...
இடைவிடாது துடித்த
என் இதயத்துக்கும்தான்..!

-சே.குமார்




Wednesday, January 13, 2010

பொங்கலோ பொங்கல்...



புத்தரிசி பொங்கல்..
புதுப்பானை பொங்கல்...
பச்சரிசி பொங்கல்...
புதுவருடப் பொங்கல்..!

வாய்க்கால் நீரில் வளர்ந்து
செழித்த அருகம்புல்லும்
பசுமாட்டின் பசுஞ்சாணியும்
பிள்ளையாராய் கொலுவிருக்க...

செங்கரும்பும் பனங்கிழங்கும்
பக்கத்தில் வீற்றிருக்க...
பச்சரிசி பால் பானையில்
பொங்கிவர துடிக்கும் வேளை
வாயெல்லாம் பல்லாய்
வாரிசுகளோடு விவசாயி...!

எத்துணை காலம் கஷ்டப்பட்டாலும்
ஏர் பிடித்த கரத்தில்
பொங்கல் சிரிக்கும் போது
பட்ட கஷ்டம் பாலாய்..!

வறண்ட பூமியும்...
கருவேல மரமும்...
காய்ந்த வாய்க்காலுமாய்...
காலம் மாறினாலும்...
தை வந்தால் வலி போகும்...

விவசாயம் மீண்டும் பெருகட்டும்...
விவசாயி கண்ணீர் விலகட்டும்...
புதுப்பானை பொங்கல் போல்
புதுவருடம் பொங்கட்டும்...!

(வலை நட்புக்கும் தமிழ்மணம், தமிழிஷ், உலவு மற்றும் அனைத்து முகம் அறியா நட்புக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.)

-சே.குமார்.




Sunday, January 10, 2010

நாட்குறிப்பு



கல்லூரிக் காலத்தில்
கிறுக்கிய டைரி...
காலங்கள் கடந்தாலும்
தாள்கள் வெளுத்தாலும்
நினைவுகள் வெளுக்காமல்..!

பெட்டியின் அடியில்
பொக்கிஷமாய்...
எதோ தேடும் போது
எட்டிப்பார்த்தது..!

எடுத்துப் பிரித்தால்
நட்பின் வாசம்...
நட்புக்குள் பகை...
கல்லூரிக் கட்டுரைப் போட்டி...

கட் அடித்துச் சென்ற சினிமா...
மாணவர்கள் சண்டை...
அண்ணனின் திருமணம்...
தாத்தாவின் மரணம்...

ஊருக்கு வந்த தார்ச்சாலை...
பஞ்சாயத்து தொலைக்காட்சி...
கோவில் திருவிழா...

காதலின் வாசம்...
காதலியின் பரிசம்...
காதலியின் முத்தம்...

முதல் அரியர்...
முதல் சிகரெட்...
முதல் சேவிங்...
முறிந்த காதல்...

எல்லாம் எழுத்தாய்
பார்த்தபோது...
என்னுள் உணர்ச்சியின்
உந்துதலால்
கண்ணீரின் ஊர்வலம்..!

-சே.குமார்.




Monday, January 4, 2010

பாசம்


மாரியாயி கோவில் திருவிழா
முத நாளே வந்துறனும்...
மகளின் அழைப்புக்கு
வயலிலிருந்து திரும்பா
கணவனை வசைபாடியபடி
தயாரானது தாய்மனம்..!

தட்டிக் கதவு திறக்கும்
ஓசைக்கு எட்டிப் பார்த்தவள்
இந்நேரம் என்ன செஞ்சே...
நேரத்தில போகவேணா...
விரசா கிளம்புய்யா என்றா..!

ஆங்... தண்ணியடச்சு
விட்டதுல நாழியாயிருச்சு...
இந்தா கிளம்பிட்டேன்...
என்றவரின் மனசுக்குள்
ஆறிப்போனது காபி ஞாபகம்..!

மிளகாய்... மல்லி...
அரிசி... பயறு...
கடலை... கோதுமை...
வளர்த்த வெடக்கோழி...

எல்லாம் மகளுக்கு...
எடுத்து வைக்கும் போது
சேர்த்து வச்ச சிருவாட்டுக்
காசும் சேர்ந்து கொண்டது..!

இருப்பதில் நல்லதாய்
தேடிக்கட்டிய சேலையும்...
நேற்று மாற்றிய மஞ்சக்கயிறும்...
செம்மண் படர்ந்த தலையும்
அழுக்கேறிய கால்களும்
வெள்ளையறியா வேட்டியுமாய்...
மக வீடு நோக்கி...

சொந்தங்கள் எல்லாம் கூட்டமாய்...
மக வீடு கலகலப்பாய்...

'இப்பத்தான் வந்தீங்களா...?'
ஓடி வருவாள் மகள்
இருமணமும் ஒன்றாய் நினைக்க...

'இப்படித்தான் வருவீங்களா...?'
மகளின் குரலில் கரைந்தது பாசம்..!

-சே.குமார்