வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! நெடுங்கவிதைகள்: December 2009

Thursday, December 31, 2009

புத்தாண்டு வாழ்த்துக்கள்

புத்தாண்டு வாழ்த்துக்கள்




வலை நட்புக்கு, மெயில் அனுப்ப எல்லோருடைய மெயில் முகவரியும் கிடைக்காததால் வலை மூலம் வாழ்த்து. புத்தாண்டு நல் ஆண்டாக அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.




நட்புடன்,
சே.குமார்



 





Sunday, December 27, 2009

அது..!?



உனக்கும் எனக்குமான
உறவில் புதிதாய் அது..!

நேற்றைய நினைவுகளை
சுமந்தபடி நான்..!
புதிய வரவின் இன்பம்
சுமந்தபடி நீ..!

என் இன்பங்கள் இறக்க
ஆரம்பிக்கும் தருணங்களில்
உன் இன்பத்தின் இசையொலி..!

உனக்குள் தேய்பிறையாய் நான்
வளர்பிறையாய் அது..!

உன் உணர்வுகளில்
என் நினைவுகளைச் சிதைத்து
வளர்ந்தது அது..!

நேற்றுவரை ஒரு கோட்டில்
இருந்த நம் உறவு
இன்றோ இரு கோடுகளாய்..!

இதுவரை நான் உன் சுவாசம்...
இன்றோ நீ அது வசம்..!

நீ தேடிய சுகம் உன்னையும்
உன் மௌனத்தால்
என்னையும் கொல்கிறது..!

எனக்குள் நீ எப்போதும்...
மீண்டும் எப்போது உனக்குள் நான்..?

உன்னோடு வாழும் அதை விடுத்து
உனக்காக வாழும்
என்னிடம் வா அன்பே..!

('அது' - மதுவாகவும் இருக்கலாம் மாதுவாகவும் இருக்கலாம்... படிப்போர் சிந்தைக்கே விட்டு விடுகிறேன்.)

-சே.குமார்




Friday, December 18, 2009

தொடரும் பொழுதுகள் (உரையாடல் கவிதைப் போட்டிக் கவிதை)






பொழுதுகளின் புழுக்கம் மறந்து
இரவின் மடியில் நாம்...
எழுதாத ஓவியமாய்
என்னருகில் நீ..!
ஆடை துறந்து
ஆசை அணிந்து நான்..!
உனக்குள் வெட்கத்தின்
விளைச்சல்..!
எனக்குள் சந்தோஷ சாரல்..!
அணைத்த போதும்
அணைய மறுத்த
தேக நெருப்பு..!
கலந்தபின் கரைந்தது காமம்..!
தினமும் தொடர்ந்தாலும்
தீரவில்லை நமக்குள்..!
துய்ப்பிற்குப்பின்
சுகமான உறக்கம்..!
விடியலில் விழித்துக்கொண்டது
நேற்றைய சண்டையின் எச்சம்..!

-சே.குமார்




Tuesday, December 15, 2009

உன் வரவால்...



நீர்-
நிலம்-
காற்று-
வானம்-
நிலா-
உறவாடின என் கவிதையில்
உன்னைப் பார்க்கும் வரை..!

அப்பா-
அம்மா-
அண்ணன்-
அக்கா-
தங்கை-
தம்பி-
உறவு இனித்தது
நீ காதல் உறவாகும் வரை..!

சேரன்-
டேவிட்-
முகமது-
உயிரான நட்புக்குள்
உண்மை இருந்தது
நீ உயிராகும் வரை..!

சினிமா-
கிரிக்கெட்-
புத்தகம்-
பைத்தியம் எல்லாம்
உன் மேல் பைத்தியம்
ஆகும் வரை..!

குட்டிச் சுவர்-
பெட்டிக் கடை-
பொழுதுபோக்கெல்லாம்
பொழுதெல்லாம்
நீ ஆகும் வரை..!

பொங்கல்-
தீபாவளி-
திருவிழா-
வருடம் ஒருமுறை
வந்து சென்றது...
உன் வரவுக்குப்பின்
வருடமெல்லாம் வராதா..?
ஏக்கத்தை என்னுள்ளே
விதைத்துச் சென்றது..!
 
-சே.குமார்




Sunday, December 13, 2009

பாழ்பட்ட மனசு



ஒற்றை ரோஜா...
உதிரும் புன்னகை...
உறவாடும் கண்கள்...
என்று என்னை
வீழ்த்திச் சென்றவளே..!

எனக்குள் காதல்விதை
விதைத்து பயிராக்கி
பின் பாழாக்கியவளே..!

பாழ்பட்ட மனசு
பண்பட்ட போதும்
ஏனோ இன்னும்
உன் ஞாபகங்கள்
எனக்குள் முளைவிட்டுக்
கொண்டுதான் இருக்கின்றன...
முயன்றும் மறக்கமுடியவில்லை..!

-சே.குமார்




Friday, December 11, 2009

சிலைகள்


வாழும் மனிதர்கள்
மத்தியில் வாழ்ந்த
மனிதர்கள் சிலைகளாய்..!
உயர்ந்தவர்களுக்கான
உன்னத பதிவுதான் சிலைகள்..!

அரசாங்கம் மரம்
வளர்க்கிறதோ இல்லையோ
சாதியை குளிர்விக்க
மறவாமல் சிலை வைக்கிறது..!

கண்ணகி இருந்தாளா...?
யோசனையின் வாசலை
கட்டிப் போட்டது கையில்
சிலம்புடன் நிற்கும் சிலை..!

வள்ளுவன் எப்படி..?
சிந்திக்கவிடாமல்
தாடியுடன் சிரிக்கும் சிலை..!

இன்னும்
எத்தனையோ
சிலைகள்..!

காவிரி வந்தால் என்ன
வராவிட்டால் என்ன...
பரிமாறிக்கொள்வோம்
கவிஞர்கள் சிலையை..!

திருவாரூரில் பிறந்தாலும்
திருநெல்வேலியில் சிலை..!
எங்கு பிறந்தால் என்ன
வைக்க இடம் இருந்தால்
வானத்தில்கூட சிலை வைப்போம்..!

சிலைகளால் சிதைப்படுகிறது
சமுதாயம்..!
சேதத்தை தவிர்க்க
வலைக்குள் சிலைகள்..!

சிலைகள் அவமதிக்கப்பட்டால்
அடிபடுவது அப்பாவிகள்..!
நாட்டுக்காக வாழ்ந்த நல் மக்கள்...
சிலைகளாய் சா'தீய' கூட்டுக்குள்..!

சிலைகள் நடும்
விவசாயத்திற்கு விலங்கிடுவோம்..!
மனிதம் விதைக்கும்
விவசாயத்திற்கு உரமிடுவோம்..!

-சே.குமார்




Wednesday, December 9, 2009

கரைந்த கனவுகள்



எத்தனையோ கனவுகள்
நெஞ்சுக்குள்..!
நேற்று நண்பன்
கொடுத்த பெஞ்சிலை
மறவாமல் அவனிடம்
கொடுக்க வேண்டும்..!
விமலா மிஸ்ஸிடம்
வீட்டுப்பாடம் காட்ட வேண்டும்..!
சாப்பிடும் போது எதாவது
கொடுக்கும் சாமிலிக்கு இன்று
நாம் கொடுக்க வேண்டும்..!
இன்னும் எத்தனையோ...
அத்தனையும் மறந்து
'அம்மா காப்பாத்து...'
அழுகுரலை மட்டும்
கடைசியாய் காற்றில்
கரைத்துச் சென்றது...
தண்ணீருக்குள் தாவிய பேருந்து..!

-சே.குமார்




Tuesday, December 8, 2009

மழை இரவில்



சோவென பெய்தமழை
சோர்வுற்ற போதினிலே...
கீதமிசைக்கும் தவளைகள்..!
'டக்... டொக்...' தாளநயத்துடன்
குடிசைக்குள் வழியும் தண்ணீர்..!
காற்றை சில்லிப்பாக்கி
உடம்பை ஆட்டிப்பார்க்கும் குளிர்..!
சாக்கடைக்குள் கலக்கும்
தெரு நீரின் சலசலப்பு..!
உறுமியபடி நீரில் நீந்தும் வாகனம்..!
கருமேகங்களுக்கிடையே
கட்டழகி நிலவின் முகம்..!
வெளிச்சக் கீற்றை
அள்ளித்தெளிக்கும் மின்னல்..!
எங்கோ பெய்யும்
மழையின் இடியோசை..!
எல்லாம் ரம்மியமாய்..!
மழையால் விழித்துக் கொண்ட
கண்களுக்குள் இருட்டு பயம்..!

-சே.குமார்




Saturday, December 5, 2009

நிறைவாய் நீ..!



ஒற்றை நாடியாம்
உனக்கு
ஊர் செல்கிறது
அதுதானே உன்
அழகு..!

தெற்றுப்பல்லாம்
உனக்கு
தெருவே சொல்கிறது
உன் சிரிப்பின்
அழகே அதுதானே..!

கோபக்காரியாம்
உறவு சொல்கிறது
கோபம் தானே
உன் குணத்தைக்
கூட்டும் அழகு..!

ராசியில்லாதவளாம்
வீடே சொல்கிறது
உன் ராசியின்
ராசி அறியாமல்..!

எல்லோரும் உன்னை
குறை கூறிய போதும்
என் மனதிற்குள்
நிறைவாய் நீ..!

-சே.குமார்




Thursday, December 3, 2009

விரக்தி பயணம்



விடுமுறைக்கு நாட்டுக்கு
மீண்டும் ஒரு விரக்தி பயணம்..!
விழிகளில் வழியும் அன்போடு
விமான நிலைய வாயிலில்
மனைவி... குழந்தை..!

ஒரு வருடப் பிரிவை
ஒரு திங்கள் போக்கிடுமா..?
மனதுக்குள் வேதனை முடிச்சு..!

கால்களை கட்டிக் கொள்ளும் குழந்தை..!
கழுத்தை கட்டிக் கொள்ளும் மனைவி..!
குதூகலத்தின் பிடியில் குடும்பம்..!
சந்தோஷங்களின் மடியில்
கழிந்தன பொழுதுகள்..!

நாட்கள் வாரங்களாகவும்...
வாரங்கள் மாதமாகவும் மாறி...
பாழாப்போன பயண நாளும்
பறந்தோடி வந்தது..!

இரவிலிருந்தே அழுது மயங்கும்
மனைவி... குழந்தை..!
நீர் வற்றிய குளமாய்
சந்தோஷம் வற்றிய முகம்..!

அழுகையின் வாசலை
அடைத்து வைத்து
பயணத்திற்கு தயாராய்..!

'போய் வருகிறேன்' ஒப்புக்காக
சொல்லும் உணர்வில்லா உதடுகள்..!
நேற்றைய சந்தோஷம் துறந்து
உப்பு நீர் சுமந்த விழிகளுடன்...

அடுத்த விரக்தி பயண நாளை
எண்ணியபடி விமானத்தில்..!

-சே.குமார்




Tuesday, December 1, 2009

பால்வினை நோய்

கொடிது... கொடிது... பால்வினை நோய்..!
அதனினும் கொடிது...
அதனால் பாதிப்புக்குள்ளாகும் இளந்தளிர்..!!

(01-12-2009 (செவ்வாய்) உலக பால்வினை (எய்ட்ஸ்) ஒழிப்பு தினம், கட்டறுப்போம் பால்வினை நோயை... உருவாக்குவோம் பால்வினை (எய்ட்ஸ்) இல்லா உலகத்தை..!)




வெறிக்கு வரியாய்...
இச்சையின் எச்சமாய்...
உறவுக்கு வரவாய்..
தாசி கொடுக்கும்
இலவச இணைப்பு..!

***

தாகாத உறவுக்கு
கிடைத்த வெகுமானம்...
தரங்கெட்டுப் போகுமே
உன் மானம்..!

***

இனித்திரும்பா பயணத்தை
இனிதே நடத்திவைக்கும்
வேட்டைக்காரன்..!

***

நீ அலைந்து பெற்றது...
அநியாயமாய்
உனக்கு மட்டுமான
மனைவிக்கும்...
வாரிசுக்கும்..!

-சே.குமார்