வரிஞ்சு கட்டிய சேலையும்
காதில் ஆடும் தண்டட்டியும்வாயில் ஊறும் போயிலையும்
நெத்தி நிறைஞ்ச குங்குமமுமாய்...
வாக்கா வரப்பு சண்டையில
இப்பவும் முதலிடம்தான்...
சண்டைக்குன்னு போனா
சரமாரி 'அந்த' சொல்லுதான்...
அதுக்குப் பயந்தே
அப்பத்தாகிட்ட வாய் கொடுக்க
பயப்படும் ஊருசனம்...
களவாணிப்பய... கிறுக்குப்பய...
ரெக்க மண்டை... விசுக்கான்...
அப்பத்தாவின் அடைமொழிகள்...
பேரனை மட்டும் செல்லமாய்
தீவட்டித்தடியன்...
ஐயா முடியாம விழுந்தப்ப
போயி சேராம
வதையை வாங்குது....
என்று பேசினாலும்...
இப்பல்லாம் அப்பத்தா
யாரோடும் சண்டையிடுவதில்லை...
பட்டப்பெயர் பயன்படுத்துவதில்லை...
முகத்தில் கவலை ரேகைகள்...
தன்னை தவிக்கவிட்டுட்டு
மகாராஜன் போயிடுவாரென்றா..?
இப்படியே அவரவிட்டுட்டு
நாம போயிடுவோமென்றா...?
யாராலும் அறியமுடியவில்லை
அப்பத்தாவின் மனசை..!
-'பரிவை' சே.குமார்